தீபாவளியையொட்டி அலைமோதும் மக்கள் கூட்டம்… கோவை கடை வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி..!!

கோவை:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை மறுநாள் (24-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் ஒப்பணக்கார வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் சாலையோரங்களில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு ஜவுளி வாங்க செல்கின்றனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் மறுநாள் தீபாவளி என்பதாலும் மக்கள் கூட்டம் மேலும் அதிகமாக காணப்பட்டு வருகிறது.போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மீது போலீசார் நின்று பைனாகுலர் மூலம் பொதுமக்கள் கூட்டத்தை காண்காணித்து வருகின்றனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சந்தேகப்படும்படியான ஆசாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் போலீசார் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவுறுத்தி வருகின்றனா். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் ஜேப்படி செய்யும் நபர்களை பிடிப்பதற்காக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சீருடையின்றி சாதாரண உடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் நாளுக்கு நாள் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையம் முன்புறம் சாலை தோண்டப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் மாற்றுபாதையில் அனுப்பப்படுகிறது. வடகோவை சிந்தாமணி ரோட்டில் வலது புரம் திரும்பும் சாலையில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம் கிராஸ்கட் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் புருக்பாண்டு ரோடு வலதுபுரம் திரும்பும் சாலையும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டி உள்ளது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் திணறடித்து வருகின்றனர். கோவை முழுவதும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்..