தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கடை வீதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..!

கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் 24-ந்தேதி வரை பொதுமக்கள் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி நிறுத்தும் இடம் அல்லது கடை உரிமையாளர்களின் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். ஆத்துப்பாலத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதியை பயன்படுத்தாமல் உக்கடத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி வாலாங்குளம், சுங்கம் வழியாக செல்ல வேண்டும். உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளையம், மருதமலை, தடாகம் செல்லும் வாகன ஓட்டிகள் பேரூர் பைபாஸ் செல்லும் ரவுண்டானா, செட்டி வீதி, சலீவன் வீதி காந்திபார்க் வழியாக செல்ல வேண்டும்.

பாலக்காட்டில் இருந்து கோவை வரும் வாகனங்கள் போத்தனூர், சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் சுண்ணாம்பு காளவாயில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு உக்கடம் வழியாக செல்ல வேண்டும்.
உக்கடத்தில் இருந்து கோவைப்புதூர் மதுக்கரை மற்றும் பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் ரவுண்டானா புட்டுவிக்கிரோடு வழியாக செல்லலாம்.
காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டில் பொருட்கள் வாங்க வருபவர்கள் தவிர, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள் 100 அடி சாலை, சிவானந்தா காலனி சாலையை பயன்படுத்தி செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டில் பொருட்கள் வாங்க வருபவர்கள் மாநகராட்சி வாகன நிறுத்த இடங்கள், கடைகளின் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்களில் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தை வாகனம் நிறுத்தும் இடங்களாக பயன்படுத்தலாம். சாலைகளில் வாகனங்களை நிறுத்த கூடாது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.