இனி அவங்களே சேர்க்கவே கூடாது- கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்

மிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய திருப்பங்கள் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், திமுக மற்றும் அதன் முன்னாள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான வார்த்தை போர் வெடித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை மிக கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்ச நன்றியுணர்வோ அல்லது அரசியல் நாகரிகமோ இல்லை என்றும், இனிவரும் காலங்களில் அந்த கட்சியை ஒருபோதும் நம்பவோ, கூட்டணியில் சேர்க்கவோ கூடாது என்றும் அவர் தொண்டர்களிடையே ஆவேசமாக பேசியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்” என்ற தலைப்பில் ஒரு வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தொண்டர்களின் உழைப்பையும், கட்சியின் பலத்தையும் நம்பியே காங்கிரஸ் கட்சி இத்தனை காலம் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்துள்ளது என்று அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சொந்தமாக தொண்டர்களை திரட்ட கூட துப்பில்லாத காங்கிரஸ் கட்சிக்கு, திமுக தொண்டர்கள் தங்களின் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி தேர்தல் வேலைகளை செய்தனர் என்று அக்கட்சி சாடியுள்ளது.

கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்தியாவில் பாஜக தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு பிரதமர் மோடியோ அல்லது அமித் ஷாவோ காரணமில்லை, காங்கிரஸின் பலவீனமே முக்கிய காரணம் என்று நான் இப்போது உணர்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக திமுகவின் தோள்களில் சவாரி செய்துவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சி திமுகவின் முதுகில் குத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட, தேர்தல் களத்தில் எங்குமே காணப்படாத காங்கிரஸ் கட்சி, திமுக தொண்டர்களின் கடுமையான உழைப்பால் மட்டுமே 5 இடங்களில் வெற்றி பெற்றது, என்று குறிப்பிட்டார்.மேலும், தேர்தலுக்கு முன்பாகவே திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு மாநிலங்களவை இடத்தையும் காங்கிரஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், எந்தவித நன்றியுணர்வும் இல்லாமல், அதிகார ஆசையின் காரணமாக ஒரே இரவில் அவர்கள் தவெக தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் பங்கெடுக்க ஓடியுள்ளனர். பிறரின் உழைப்பில் வாழும் ஒரு ஒட்டுண்ணி போல காங்கிரஸ் செயல்படுகிறது என திமுக இளைஞரணி தீர்மானத்தில் மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணியின் இந்த கடுமையான தாக்குதலுக்கு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார் தரப்பிலிருந்து உடனடி பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. “தேர்தல் தோல்வியிலிருந்து திமுக இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இத்தகைய விமர்சனங்கள் காட்டுகின்றன. விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது முதல் மாநாட்டிலேயே, தவெக தலைவர் விஜய் அவர்கள் தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று தெளிவாக அறிவித்திருந்தார். அதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு அவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தியுள்ளனர். திமுக கூட்டணியில் மூச்சுத்திணறலை உணர்ந்த கூட்டணி கட்சிகள், விஜய்யின் பரந்த ஜனநாயக கொள்கையை ஏற்றுக்கொண்டு அமைச்சரவையில் இணைந்துள்ளன. தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் இது. மக்களின் தீர்ப்பை திமுக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, கூட்டணி கட்சிகளை இழிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும், என்று அவர் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் எந்த சந்தர்ப்பத்திலும் சேர்க்கக்கூடாது . காங்கிரஸ் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு.காங்கிரஸ் இருந்தால் திமுகவுக்கு நஷ்டம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்  .திராவிட மாடல் அரசியலை பாதுகாக்க காங்கிரஸ் இல்லாத கூட்டணி தேவை