வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்களே உஷார்- டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று சைபர் குற்றங்களில்
ஈடுபட வைக்கும் கும்பலிடமிருந்து உஷாராக இருக்க வேண்டுமென காவல் துறை டிஜிபி

சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

தாய்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் சம்பந்தப்பட்ட முகவர்களிடம் ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரை செலுத்தியுள்ளனர். பின்னர் சுற்றுலா பயண விசா மூலமாக பணம் செலுத்திய நபர்களை
துபாய் வழியாக பேங்காக்கிற்கு அழைத்துச் சென்று, பின்னர் அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மர் நாட்டிற்கு கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் இவர்களை மிரட்டி சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். இதேபோல கம்போடியா நாட்டில் உள்ள ஒரு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி வேலை வாய்ப்பு உள்ளதாக கூறி முகவர்கள் மூலம் ஆட்களை தேர்வு செய்து, அவர்களை கம்போடியா நாட்டிற்கு
அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.

வெளிநாட்டில் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கும் தமிழக இளைஞர்களின் வீடியோ காட்சிகள் மற்றும் உறவினர்களின் புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர். குறிப்பாக
கம்போடியா நாட்டிலிருந்து 13 பேரும், தாய்லாந்து நாட்டிலிருந்து 29 பேரும் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். வெளிநாட்டில் சிக்கித் தவித்த இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மோசடிக்கு உதவியாக இருந்த திருச்சியில்
இயங்கி வரும் கேர் கன்சல்டன்சி நிறுவனத்தை சேர்ந்த முகவர்கள் ஷானவாஸ் மற்றும்
முபாரக் அலி ஆகியோரை தமிழக போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்துச் செல்லும்
நபர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு
விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டில் 3, 4 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி கும்பல் கூறி சுற்றுலா விசாவில் அழைத்து சென்று, அங்கு ஆன்லைன் லோன் ஆப், மேட்ரிமோனி மற்றும் கிரிப்டோ கரன்சி
போன்ற சைபர் கிரைம் மோசடி வேலைகளில் ஈடுபடுத்த வைப்பதாகவும், குறிப்பாக
வேலைக்கு செல்லும் நபர்களின் இமெயில் ஐடி, வாட்ஸ் அப் எண் ஆகியவை பயன்படுத்தியே இதுபோன்ற மோசடி செயலில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.