சீனாவில் மீண்டும் அறிமுகமாகிறது- ஒரு நாடு.. ஒரு தலைவர் முறை..

பீஜிங் : சீனாவில் ஆட்சியில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இதில், ஒரு நாடு, ஒரு தலைவர் என்ற பழைய முறைக்கு மீண்டும் மாறும் முறை அமலாக உள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் அதிபராக, 2012ல் பதவியேற்றார் ஷீ ஜிங்பிங். சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறையே உள்ளது. அதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சி புரிந்து வருகிறது. அதிபர் பதவியில் இருப்பவர், இரண்டு முறை ஐந்தாண்டுகள் பதவியைத் தொடர முடியும் என்ற நடைமுறை உள்ளது. அதாவது, 10 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம்.

இதன்படி, ஜிங்பிங் சீன அதிபர் பதவியில், 10 ஆண்டுகளை விரைவில் நிறைவு செய்ய உள்ளார்.இந்நிலையில், அவர் அதிபர் பதவியை ஏற்றதும், கட்சியின் தலைவர், ராணுவத்தின் தலைமைப் பொறுப்பு ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். சீனாவில் அசைக்க முடியாத தலைவராக ஜிங்பிங் மாறியுள்ளார். தன் வாழ்நாள் முழுதும் அதிபர் பதவியில் இருக்கும் வகையில், கட்சியில் சட்டம் திருத்தம் செய்வதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங் தான், 1976ல் அவர் இறக்கும் வரை அதிபராகவும், கட்சித் தலைவராகவும் மிக நீண்ட காலம் இருந்தார். அதன் பிறகு அதிபராக பொறுப்பேற்ற டெங்க் ஜியோபிங் ஆட்சியின்போது தான், 10 ஆண்டுகள் மட்டுமே பதவி என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

தற்போது மீண்டும் மா சேதுங் காலத்துக்கு சீனா செல்ல உள்ளது. கட்சியின் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு, வரும், 16ம் தேதி நடக்க உள்ளது.இதில் கட்சியின் நிர்வாகிகள் சேர்த்து, வாழ்நாள் முழுதும் ஜிங்பிங் அதிபராக தொடரும் முடிவை எடுக்க உள்ளனர். இதற்கேற்ப, கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், தன் ஆதரவாளர்களை மட்டுமே ஜிங்பிங் நிறுத்தினார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட, 2,296 பேர் இணைந்து, ஜிங்பிங் அதிபராக தொடரும் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளனர்.