சூலூர் அருகே கல்லூரி பேருந்து மோதி பயங்கர விபத்து- தந்தை, மகன் பலியான சோகம்..!

சூலூர் அருகே அதிகாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

கோவை, கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதி பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு விவசாயி. இவருடைய மகன் நந்தகுமார். அவர் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்ல முடிவு செய்தார். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல கருமத்தம்பட்டி 4 ரோடு பகுதிக்கு தான் வந்து பேருந்து ஏற வேண்டும். இதற்காக தனது மகன் நந்தகுமாரை இருசக்கர வாகனத்தில் கருமத்தம்பட்டி 4 ரோடு பகுதியை நோக்கி தங்கவேல் வந்து கொண்டு இருந்தார். அவர்கள் இரண்டு பேரும் கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாபாளையம் 4 ரோடு பகுதிக்கு வந்தனர். பின்னர் சாலையை கடக்க முயன்றனர். அப்பொழுது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து அதிவேகமாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தந்தை, மகன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் இரண்டு பேரும் கீழே விழுந்தவுடன் தரவென சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அந்த பேருந்து சக்கரம் அவர்கள் மீது ஏறியது. இதை பார்த்ததும் அந்த பேருந்தில் இருந்த மாணவர்கள் கூச்சலிட்டனர்.
இந்நிலையில் விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து நடந்த காலை நேரம் என்பதால் அந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. எனினும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இந்த விபத்தை பார்த்ததும் இது குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பலியான தங்கவேல், நந்தகுமார் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி பேருந்து ஓட்டி சென்ற பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் செல்வம் என்பவரை கைது செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதற்கு இடையே தங்கவேல், நந்தகுமார் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து அவருடைய உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் வேகத்தடை இருக்கிறது. ஆனால் அந்த வேகத் தடைத்தை பார்க்காமல் வேகமாக பேருந்து வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.