கோவை சரக டி.ஐ.ஜி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. போலீசார் பெரும் அதிர்ச்சி..!!

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியவில்லை.

கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயகுமார் கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் டிஐஜி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்,சோகத்த்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில்,
தனது மெய்பாதுகாவலர் (கன் மேன்) துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.இவர் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.நேற்று மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஒருவரின் மகன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.