இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

ன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது, இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

ஒவ்வொரு வருடமும், முஸ்லிம்கள் மிக முக்கியமான பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவதுண்டு. இஸ்லாமியர்கள் ஒன்பதாம் மாதத்தில், இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், நோன்பை அனுசரிக்கின்றனர்.

வானில் தோன்றும் பிறை நிலவைக் கொண்டே இந்த நாள் முடிவு செய்யப்படும் என்பதால், உலகம் முழுவதும் பல்வேறு தேதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 21 (வெள்ளிக்கிழமை) நேற்று அல்லது ஏப்ரல் 22 (சனிக்கிழமை) இன்று கொண்டாடப்படுகிறது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் :

ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்….

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி:

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்பமுடன் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் :

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது பரிவுகாட்டி, உண்ண உணவளித்து, தானதர்மங்கள் செய்து, புனிதநோன்பினை முடித்து ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியமக்களுக்கு வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு ‘சதக்கத்துல் பித்ர்’ என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடனும் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

இறைநம்பிக்கையுடன் நபிகள்_நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம். இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் பண்டிகை நல்வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

சமாதானம், சகோதரத்துவம் சிறக்கட்டும், சமூக நல்லிணக்கம் என்றும் நம்மிடம் தழைக்கட்டும் என இறைவனை வேண்டி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் எனது இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கின்றேன்