குழந்தைகளே உஷார்!! கோவைக்குள்ளும் வந்துவிட்டது பன்றி காய்ச்சல்- 5 பேர் அனுமதி- சுகாதாரத் துறை எச்சரிக்கை..!

கோவையிலும் கடந்த 2 வாரங்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பன்றி காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். எனவே குழந்தைகளிடையே லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் காணப்பட்டால் தாமதிக்காமல் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைப் பெற்றுகொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: –
கோவை மாவட்டத்தில் தினசரி 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. இதில் சராசரியாக 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏ.பி.சி என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சி நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. சி நிலையில் உள்ளவர்களை மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் ஆஸ்பத்திரிகளில் 5 பேர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், வாந்தி போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்.
பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்
தீவிர பாதிப்பின் போது மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளிடையே மேற்கொண்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை ஓய்வுக்கு பின்னர் இதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம் தான். இருந்தாலும் பெற்றோர்கள் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.