ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல தடை- மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை..!

சென்னை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்யவும், பட்டாசு பார்சல்களை பறிமுதல் செய்யவும் தெற்கு ரயில்வே தனிப்படை அமைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஊர்களுக்கு தீபாவளியைக் கொண்டாட ரயிலில் பயணம் செய்வார்கள். அப்படி செல்லும் போது, மக்கள் தங்கள் சாமான்களோடு பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பிடிக்கக்கூடிய தன்மை உள்ளதால் நெருப்பு பிடித்து விபத்துகள் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும்போது, எளிதில் தீப்பற்றக்கூடிய சிகரெட், தீப்பெட்டி, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிபொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்களுக்கு ரயில்வே சட்டம் 1989-ன் படி மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் யாராவது பட்டாசுகளை எடுத்துச் செல்வதைக் கண்டால், ரயில்வே ஹெல்ப்லைன் 139க்கு தகவல் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.