ஸ்கூட்டர் மீது கிரேன் மோதி விபத்து – திமுக வட்ட செயலாளர் மனைவியுடன் பரிதாப பலி..

கோவை பீளமேடு முத்து வீதியை சேர்ந்தவர் சபரி தன்ராஜ் (வயது 49)) இவர் பீளமேடு பகுதி 27 வது திமுக வட்டச் செயலாளர்.இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 45 )இவர்கள் இருவரும் நேற்று மாலை ஸ்கூட்டரில் காந்திபுரத்தில் உள்ள ஜி.பி. சிக்னல் பகுதியில் இருந்து நவ இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஸ்கூட்டரை சபரி தன்ராஜ் ஓட்டினார். கோவை 100 அடி ரோடு மேம்பாலம் இறங்கும் இடத்தில் உள்ள தனலட்சுமி நகர் அருகே ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கிரேன் வாகனம் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். பாக்கிய லட்சுமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். சபரி தன்ராஜ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக கிரேன் ஓட்டி வந்த ரத்தினபுரி கண்ணப்ப நகர் சேர்ந்த வசந்தகுமார் ( வயது 23 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கிரேன் மோதி கணவன் – மனைவி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.