பத்திரப்பதிவு கட்டணங்களில் மீண்டும் மாற்றம் – அதிருப்தியில் மக்கள்..!

தமிழ்நாட்டில் பல காலமாகப் பத்திரப்பதிவுத் துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்து வந்த நிலையில், சமீபத்தில்தான் கட்டணங்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டன.

பொது அதிகாரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை உள்ளிட்ட பத்திரங்களின் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

அதேபோல, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவுக் கட்டணத்தையும் அரசு உயர்த்தியிருந்தது. இந்த கட்டணங்களை குறைக்க கோரிக்கை எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து, சிங்கார சென்னை கட்டுனர் சங்க தலைவர் அனிபா, செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “சமீபத்திய பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டண உயர்வு சம்பந்தமாக அனைத்து கட்டுனர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று எங்களது குறைகளை நிவர்த்தி செய்வதாக வாக்களித்த பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு நன்றி.

உயர்த்தப்பட்ட பல்வேறு சேவைகளின் பதிவு கட்டணங்களின் அதீத உயர்வை மறு மதிப்பாய்வு செய்ய வேண்டும். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசுக்கும், கட்டுமான துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர கட்டுமான தொழில் புரியும் கட்டுனர்களுக்கு பெரிதும் பொருளாதார உதவியாக இருப்பது “இன்வெஸ்டர்ஸ்” எனப்படும் முதலீட்டாளர்கள்தான். அவர்கள் கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்து கட்டுமானம் நிறைவு பெறும்போது அதை மீண்டும் மறு விற்பனை செய்து லாபத்தை எடுத்து கொள்வார்கள்.

இத்தகைய முதலீட்டாளர்களால் அரசுக்கு ஒரே சொத்துக்கு 2 முறை வருவாய் வரக்கூடிய வாய்ப்பாய் அமைகிறது. அத்தகைய முதலீடுகள் இத்தகைய பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால், செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும். இதன் மூலம், செலவினங்கள் குறைவாக உள்ள மற்றும் லாபம் அதிகமுள்ள அண்டை மாநிலங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பதிவு கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி போன்ற வருமானங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்படும்.

பெரு முதலாளிகளை மட்டுமே மனதில் வைத்து சீர்திருத்தப்படும் சட்டங்களால் குறுந்தொழில்கள் பாதிப்படைகிறது. உதாரணத்திற்கு தெருவுக்கு தெரு இருந்த மிதிவண்டி சீர்திருத்த கடைகள், நூலகங்கள், முடி திருத்தும் நிலையங்கள், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்டிக்கடைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் பாமர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது.

சீர்திருத்தம் மற்றும் மாற்றம் என்பது காலத்திற்கு ஏற்ப தேவையான ஒன்றுதான். ஆனால் அத்தகைய மாற்றங்களை மறுசீரமைக்கும் போது தமிழர்களின் பொருளாதார மரபு சார்ந்த வாழ்க்கை நெறிமுறை பாதிப்படைய செய்யும் வகையில் இருப்பது ஏற்புடையதல்ல. ஆகையால், இது சம்பந்தமாக அரசு கவனத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது தமிழக அரசுக்கு மேலும் வலு சேர்க்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.