இவர்கள் எல்லாம் ஆண்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது..!

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்..

லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது..

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதற்கு ஒமிக்ரானின் XBB.1.16 என்ற துணை மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் XBB.1.16 துணை மாறுபாட்டின் பரவல் அதிகரித்துள்ளது. எனவே, இந்த துணை மாறுபாடு காரணமாக இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வரக்கூடும் என்றும், XBB.1.16 இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள கோவிட்-19 தேசிய பணிக்குழு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ” பாக்டீரியா தொற்று இருப்பதாக மருத்துவ ரீதியாக சந்தேகம் இருந்தால் தவிர, ஆண்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. மற்ற உள்ளூர் நோய்த்தொற்றுகளுடன் கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

சமூக இடைவெளி, முகக்கவசம் பயன்பாடு, கை சுகாதாரம், கொரோனா அறிகுறிகள், வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டலைக் கண்காணிக்க வேண்டும்.. சுவாசிப்பதில் சிரமம், உயர்தர காய்ச்சல்/கடுமையான இருமல், குறிப்பாக 5 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். கூடுதலாக, மிதமான அல்லது கடுமையான நோய்களில் முன்னேற்றம் ஏற்படும் அபாயத்தில், “ரெம்டெசிவிரை 5 நாட்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய சுகாதார அமைச்சகம், மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியது.. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சோதனை, தடம், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் ஆகிய ஐந்து மடங்கு உத்திகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.. மேலும் நோய்த்தொற்றைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஆபத்து மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..