உணவு கடையில் திடீர் தீ விபத்து: மனைவி உடல் கருகி பலி- கணவர் படுகாயம்..

கோவை துடியலூரை அடுத்த இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 60). இவரது மனைவி சாந்தி (58).

கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் உணவு கடை வைத்து நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல கடையில் உணவு சமைத்து கொண்டு இருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு திடீரென சாந்தி மீது தீ பிடித்தது. தீ மளமளவென சாந்தி உடல் முழுவதும் பரவியது.இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ராஜன் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தார். அதில் ராஜன் மீதும் தீ பிடித்தது. வலியால் 2 பேரும் அலறி துடித்தனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைத்து 2 பேரையும் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு கடையில் கியாஸ் சிலிண்டர் கசிவால் தீ பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.