கோவையில் கரும்புகையுடன் தரையிறங்கிய விமானம்

கோவையில் கரும்புகையுடன் தரையிறங்கிய விமானம்.

கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று கரும்புகையுடன் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலைத்திற்கு தினந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று காலை கோ ஏர்-43 என்ற விமானம் ஒன்று பெங்களூரில் இருந்து 92 பயணிகளுடன் மாலி நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விமானம்

கோவை சுற்றுவட்டாரப்பகுதிக்குள் பறந்து கொண்டிருந்ததால் இங்கிருந்த விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் மதியம் 12.57 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்து கரும்புகை வந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.