பிறந்து 20 நாட்களேயான பெண் குழந்தை திடீர் மரணம்..

குனியமுத்தூர்:ஆந்திராவை சேர்ந்தவர் ராகுல். இவரது மனைவி மனீஷா (வயது 25). இவர்கள் கோவை சுந்தராபுரம் காமராஜர் நகரில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மனீஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 14-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மனீஷா வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் குழந்தை மூச்சு பேச்சின்றி அசைவற்ற நிலையில் இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனீஷா மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.