மின்சாரம் தாக்கி 1 வயது சிறுமி பலி..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் புளியன் தோப்பு பகுதியை
சேர்ந்தவர் செல்வன் (வயது 25). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது ஒரு
வயது மகள் தர்ஷா.
இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை
செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிறுமி தர்ஷா வீட்டின் முன்பு
விளையாடி கொண்டு இருந்தார். பின்னர் பக்கத்து வீட்டுக்கு சென்று விளையாடினார். அப்போது அவர் அங்கு இருந்த யு.பி.எஸ் வயரை திடீரென எதிர்பாராதவிதமாக தொட்டார். இதில் மின்சாரம் தாக்கி சிறுமி தூக்கி வீசப்பட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு சிறுமியின் தாயார் அபிராமி அங்கு ஓடி வந்தார்.
மகள் தர்ஷா மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி
அடைந்தார். உடனே மகளை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்கு சேர்த்தார்.

ஆனால் அங்கு சிறுமி தர்ஷாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைகேட்டு அவரது தாயார் மற்றும்
குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம்
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வயது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை
ஏற்படுத்தி உள்ளது.