கோவை முழுவதும் 85 பேனர்கள் அகற்றம்…போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தகவல்..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. தற்போது சூலூர், கோட்டூரில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் போலீஸ் நிலையங்கள் இன்று திறக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையங்கள் எண்ணிக்கை 6 அதிகரித்துள்ளது. தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ள இந்த காவல் நிலையங்களுக்கு விரைவில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும். சூலூர் ,அன்னூர் பெரியநாயக்கன்பாளையமபொள்ளாச்சி கிழக்கு, ஆனைமலை, மதுக்கரை, ஆகிய 6 இடங்கள் அதிக விபத்து நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 11 சதவீதம் விபத்து குறைந்துள்ளது. வரும் நாட்களில் விபத்தை மேலும் 25 சதவீதமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மலுமிச்சம்பட்டி, கற்பகம் கல்லூரி சிந்தாமணிபுதூர் பகுதியில் விபத்துக்களை குறைக்க ரவுண்டான முறையில் போக்குவரத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருமத்தம்பட்டியில் பேனர் விழுந்து 3 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் 85 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. அனுமதி இன்றி பேனர் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.