கோவையில் ஒரே நாளில் சாலை விபத்தில் 3 பேர் பரிதாப பலி..

கோவை மாவட்டம் காரமடை சிறுமுகை பக்கம் உள்ள பெல்லே பாளையம் கிராமம், குமரன் குன்று பகுதியைச் சேர்ந்தவர் காந்தி ( வயது 49) இவர் நேற்று மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள எருமை பள்ளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் சென்ற பைக் மீது மோதியது. இதில் காந்தி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து காரமடை போலீசார் கார் ஓட்டி வந்த கருவலூர் மனோஜ் ( வயது 29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 69 ) அங்குள்ள தனியார் மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் கோவை -அன்னூர் ரோட்டில் நடந்து சென்றார். கணேசபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார்.

இதேபோல பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி, அண்ணா நகரை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 40 )கூலித் தொழிலாளி. நேற்று இவர் பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதி சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.