ஒரே நாளில் சாலை விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாப பலி..

கோவையில் நேற்று ஒரே நாளில் நடந்த வெவ்வேறு சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:- கோவை நியூ சித்தாபுதூர், அன்னபூர்ணா லேஅவுட்டை சேர்ந்தவர் மனோகரன் .இவரது மகன் விஷ்ணுராம் ( வயது 19) இவர் நேற்று காந்திபுரம் 9-வது வீதியை சேர்ந்த பிரதாப் (வயது 24) என்பவருடன் பைக்கில் வி. கே. கே.மேனன் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை விஷ்ணுராம் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது . இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விஷ்ணுராம் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த ஆவாரம்பாளையம் காமதேனு நகரை சேர்ந்த கோவிந்தராஜ் ( வயது 77 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே போல கோவைப்புதூர் அறிவொளி நகர், அம்பேத்கர் சதுக்கத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 43 )இவர் நேற்று அங்குள்ள கன்னிமார் கோவில் வீதியில் ரோடு ஓரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் சத்தியமூர்த்தி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை தேடி வருகிறார்கள்.

இதே போல காந்திபார்க், குரும்பர் வீதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 52) இவர் நேற்று திருச்சி ரோட்டில் சுங்கம் பகுதியில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் இவர் மீது மோதியது .இதில் முத்துப்பாண்டி படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்னி பஸ் ஒட்டி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 33) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.