விபத்து இழப்பீடு வழங்காத 3 அரசு பேருந்துகள் ஜப்தி..!

விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு வழங்காததால் 3 அரசு பேருந்துகள் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன். இவரது மனைவி பிரியா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாஸ்கரன் அவரது நண்பர் மகேஷ் குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது அரசு பேருந்து மோதியதில் பாஸ்கரன் உயிரிழந்தார். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பாஸ்கரனின் இறப்புக்கு இழப்பீடு வழங்க கோரி அவரது மனைவி பிரியா மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதில் பிரியா மற்றும் அவரது குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 28.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றம் நீதிபதி சிவக்குமார் கடந்த 2 ம் தேதி உத்தரவிட்டார். ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பிரியா கடந்த மார்ச் 12 ஆம் தேதி சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி சிவக்குமார் அரசு போக்குவரத்து கழகம் சொந்தமான மூன்று பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து நீதிமன்ற அலுவலர்கள் முரளி ராஜ் வழக்கறிஞர்கள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று அரசு பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.