விபத்தில் கோவை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாப பலி..

கோவை :மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய் ஷித்தல் முண்டே ( வயது 21) ரிஷிகேஷ் ரமேஷ்வர் குட்டே ( வயது 20) நண்பர்கள் ஆன இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் கிணத்துக் கடவு அருகே கொண்டம்பட்டியில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர் . இதில் ஜெய் ஷித்தல் முண்டே கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். ரிஷிகேஷ் ரமேஷ்வர் குட்டே அருகில் உள்ள லட்சுமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஜெய் ஷித்தல் முண்டே, ரிஷிகேஷ் ரமேஷ்வர் குட்டே ஆகிய 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கோவை – பொள்ளாச்சி 4 வழி சாலை ஓரம் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றனர். அங்கு டீ குடித்துவிட்டு திரும்பினர். மோட்டார் சைக்கிளை ஜெய் ஷித்தல் முண்டே ஓட்டினார் .கோவை பொள்ளாச்சி 4 வழி சாலையில் அரசம்பாளையம் பிரிவு அருகே வந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ 4 சக்கர வாகனம் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது . இதில் தூக்கி வீசப்பட்டு படுக்காயம்  அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியில் இருவரும் இறந்து விட்டனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப் இன்ஸ்பெக்டர் திருமலைசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விபத்து ஏற்படுத்தி விட்டு தலை மறைவான 4 சக்கர வாகனத்தை தேடி வருகிறார்கள்..