கோவையில் யுவன் சங்கர் ராஜா இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் காயம்

கோவையில் யுவன் சங்கர் ராஜா இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் காயம்

கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியை காண வந்தவர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி, பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் எஸ்.என்.எஸ். கலை அறிவியல் கல்லூரியில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக யுவன்சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல் மற்றும் முதலில் வரும் ஆயிரம் பேருக்கு இலவச அனுமதி என்ற விளம்பரத்தை பார்த்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், அதிக படியாக வந்த கூட்டத்தால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், நிகழ்ச்சியை காண வந்தவர்கள் அங்கிருந்த கல்லூரி சுற்றுச் சுவர் மீது ஏறி உள்ளே செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது.

ஏராளமானோர் சுற்றுச் சுவர் மீது ஏறிச் செல்ல முயன்ற நிலையில், திடீரென அந்த சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு பெண் உதவி ஆய்வாளர் பிலோமினா, மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

சுவர் இடிந்ததையும் கவனிக்காமல் பலர், கீழே விழுந்தவர்கள் மீதே ஏறிச் சென்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சிக்கு அதிக கூட்டம் வரும் என்பதால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா? என்பது குறித்தும் அனைத்து துறைகளிடமும் உரிய அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.