கைது செய்த சினிமா தயாரிப்பாளரை வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு பிறகு விடுவித்த போலீஸ் …

கைது செய்த சினிமா தயாரிப்பாளரை வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு பிறகு விடுவித்த போலீஸ் …

கரூர் மாவட்டம் நல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் ( 31). இவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவர் மீது சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் சினிமாவில் கதாநாயகியாக தன்னை நடிக்க வைப்பதாக கூறி பொள்ளாச்சிக்கு தன்னை பார்த்திபன் வரவழைத்தார். அங்கு நடிகைக்கான தேர்வு நடக்கும்போது தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாகவும், இதனால் தான் கர்ப்பமானதும், குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது என்பதால் கர்ப்பத்தை கலைத்து விடும் படி கூறி கலைத்து விட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

அதன் பேரில் போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் பார்த்திபன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது .அதில் புகார் அளித்த பெண் 18 வயதிற்கு மேல் தான் சினிமாவில் நடிப்பதற்காக வந்தார் என்றும் அந்த நடிகைக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் அதற்குரிய ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் பார்த்திபனை மறு அறிவிப்பு வரும் வரை கைது செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் இருந்த தயாரிப்பாளர் பார்த்திபனை சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் நான்கு பேர் கொண்ட போலீசார் சுற்றி வளைத்து கைது செய்வதாக கூறி இருக்கின்றனர். அப்போது சினிமா தயாரிப்பாளர் பார்த்திபன் இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருப்பதாகவும் வழக்கின் விசாரணை திங்கட்கிழமை வர இருப்பதாகவும் அதுவரை தன்னை கைது செய்யக் கூடாது என உத்தரவு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதை போலீசார் கேட்க மறுத்ததுடன் உடனடியாக பார்த்திபனை அவர்கள் வந்திருந்த காருக்குள் ஏற்றி அழைத்துச் சென்றனர். இது குறித்த தகவல் அறிந்த தயாரிப்பாளர் பார்த்திபனின் வழக்கறிஞர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர்  காவல் நிலையத்திற்கு விரைந்து சென்றனர் அதே சமயத்தில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் உள்ளிட்டோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய  இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவியை செல்போன் மூலம் அழைத்து கைது செய்யக் கூடாது என உத்தரவு இருந்தும் கைது செய்து இருப்பது சட்ட விரோதம் என கூறி உள்ளனர். கோவையில் இருந்து சென்ற வழக்கறிஞர்களும் இது குறித்து போலீசாரிடம் கூறியிருக்கின்றனர். அதன் பின்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தயாரிப்பாளர் பார்த்திபனை கைது செய்யாமல் உடனடியாக விடுவித்து அனுப்பியுள்ளார். உயர் நீதிமன்றம் கைது செய்யக் கூடாது என கூறியிருந்த நிலையில் போலீசார் சினிமா தயாரிப்பாளர் பார்த்திபனை கைது செய்வதாக அழைத்துச் சென்று பின்னர் வக்கீல்கள் விளக்கம் அளித்த பின் விடுவித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.