மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான மத்திய வித்யாலயா சங்கதன் (KVS), 2026-27 கல்வியாண்டிற்கான மூன்றாவது மொழி கட்டமைப்பைச் செயல்படுத்துவதன் கீழ், அனைத்து மத்திய வித்யாலயா பள்ளிகளிலும் 6 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒரு சமஸ்கிருத பிரிவையாவது பராமரிப்பது கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மே 29 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அனைத்து மத்திய வித்யாலயா பள்ளிகளும் மூன்றாவது மொழி கட்டமைப்புக்கான (R3) விருப்பங்களை மாணவர்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் பெறும் செயல்முறையை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாவது மொழியானது, முதல் மொழி (R1 – இந்தி) மற்றும் இரண்டாவது மொழி (R2 – ஆங்கிலம்) ஆகியவற்றிலிருந்து மாறுபட்டதாக, அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் உள்ள சமஸ்கிருதம் அல்லது பிராந்திய/மாநில மொழியாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாற்றத்தக்க பணியிடங்களில் உள்ள ஊழியர்களின் குழந்தைகளுக்கு வசதியாக இருக்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ஒரு சமஸ்கிருத பிரிவு இருக்க வேண்டும் என்ற தேவையே தவிர, மாணவர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் சமஸ்கிருதம் அல்லது பிராந்திய மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பள்ளி அளவில் ஊழியர்களின் தேவையை மறுமதிப்பீடு செய்வதற்காக, மாணவர்களின் மூன்றாவது மொழி விருப்பங்கள் குறித்த தரவுகளை ‘சமாகம்’ (Samagam) போர்டல் மூலம் மத்திய வித்யாலயா சங்கதன் கோரியுள்ளது. 6 மற்றும் 9 ஆகிய இரு வகுப்புகளுக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுத்த மூன்றாவது மொழியின் அடிப்படையில், சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகளின் பிரிக்கப்பட்ட பிரிவுகளின் தரவுகளைப் பள்ளிகள் தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வகுப்புகளைச் சீராக நடத்துவதற்கு ஒரே மூன்றாவது மொழியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களை ஒரே பிரிவில் வைத்திருக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மொழிப் பிரிவுகளின் ஏற்பாடுகளை விளக்குவதற்குச் சுற்றறிக்கையில் சில உதாரணங்களும் கூறப்பட்டுள்ளன. அதன்படி, சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிப் பிரிவுகளின் எண்ணிக்கை மாணவர்களின் சேர்க்கையைப் பொறுத்தது ஆகும். ஒரே ஒரு பிரிவு மட்டுமே உள்ள பள்ளியில், குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகளுக்குத் தனித்தனி குழுக்கள் உருவாக்கப்படலாம். இரண்டு பிரிவுகள் உள்ள பள்ளிகளில், ஒரு சமஸ்கிருதம் மற்றும் ஒரு பிராந்திய மொழிப் பிரிவு பராமரிக்கப்படலாம். மூன்று பிரிவுகள் உள்ள பள்ளிகளில், ஒவ்வொரு மொழியையும் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிப் பிரிவுகளின் விநியோகத்தைப் பள்ளி முதல்வர்கள் தீர்மானிக்கலாம். இருப்பினும், ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் ஒரு சமஸ்கிருத பிரிவு இருப்பது கட்டாயமாகும்.
கடந்த மாதம், மத்தியக் கல்வி வாரியம், ஜூலை 1 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் குறைந்தபட்சம் இரண்டு பூர்வீக இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளைக் கற்பதைக் கட்டாயமாக்கியுள்ளதாகத் தெரிவித்தது. இந்த நடவடிக்கை, தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பள்ளி கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF-SE) 2023 ஆகியவற்றுடன் சிபிஎஸ்இ-இன் கல்வித் திட்டத்தை சீரமைப்பதன் ஒரு பகுதியாகும்.மே 15 அன்று வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டு மொழியைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள், இரண்டு பூர்வீக இந்திய மொழிகளைப் படித்த பிறகு மூன்றாவது மொழியாக மட்டுமே அதைத் தேர்ந்தெடுக்க முடியும் அல்லது கூடுதல் நான்காவது மொழியாகத் தேர்ந்தெடுக்கலாம். கற்றலில் கவனம் செலுத்துவதற்கும், மாணவர்கள் மீதான தேவையற்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கும், 10-ஆம் வகுப்பு அளவில் மூன்றாவது மொழிக்கு (R3) எந்தவொரு வாரியத் தேர்வும் (Board Examination) நடத்தப்படாது என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது. மேலும், பிரத்யேகமான மூன்றாவது மொழி பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வரை, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த மொழிக்கான 8-ஆம் வகுப்பு மூன்றாவது மொழி பாடப்புத்தகங்களை (2026-27 பதிப்பு) பயன்படுத்த வேண்டும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.







