திருமணம் ஆகி 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை – ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அன்னையின் கிழக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (44). இவருக்கும் கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் கீர்த்தனா (23) இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு ஆடி 18 பண்டிகைக்காக கார்த்தி ,கீர்த்தனா இருவரும் கோவையில் உள்ள கீர்த்தனாவின் வீட்டிற்கு  சென்று விட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் சத்தியமங்கலம் வந்துள்ளனர். இதற்கிடையே  முன்தினம் கீர்த்தனா சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கீர்த்தனாவை சிகிச்சைக்கு அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி கீர்த்தனா உயிரிழந்தார். கீர்த்தனாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகியுள்ளதால் இது குறித்து கோபி ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மணமாகி இரண்டு மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..