வீட்டில் துணி துவைக்கும் போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பரிதாப பலி..!

கோவை:
பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி செல்வநாயகம் (வயது 52).இவர்களது மகன் செந்தில்குமார் (32).

செல்வநாயகம் நேற்று வீட்டின் முன்பு நின்று துணிகளை துவைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி அருகில் இருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். வீட்டிற்குள் இருந்த அவரது மகன் செந்தில்குமார் ஏதோ சத்தம் வருவதை கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது தாயார் தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தண்ணீர் தொட்டியில் இருந்து செல்வநாயகத்தை மீட்டார். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்சில் வந்த டாக்டர் செல்வநாயகத்தை பரிசோதனை செய்து பார்த்தார்.

அவர் செல்வநாயகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வநாயகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.