எங்க நாட்டு மக்கள் மீது கை வச்ச சும்மா இருக்க மாட்டோம் அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை..!

எங்கள் நாட்டு மக்களை ரஷ்யா குறி வைத்தால் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா தங்களது வீரர்களை உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது என்று அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வருகின்றனர். ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

இதற்கிடையில் உக்ரேனில் இருந்து 12-க்கும் அதிகமான நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில் “உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் உக்ரைனில் உள்ள அமெரிக்க மக்களை ரஷ்யா குறி வைத்தால் நாங்கள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதவில்லை என்றாலும் நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.