பி.ஏ.பி கால்வாயில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத பெண்..!

கோவை சுல்தான்பேட்டை அடுத்த வதம்பச்சேரி அருகே பி.ஏ.பி கால்வாய் பாலத்தின் அடியில் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வதம்பச்சேரி கிராம நிர்வாக அதிகாரி மேகலாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். போலீசாரும் அங்கு வந்து அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண்ணை சோதனை செய்தனர். அவர் பச்சை நிற சேலை அணிந்திருந்தார். பின்னர் போலீசார் அவரின் உடலை மீட்டு கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்வாயில் இறந்து கிடந்த அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்வாயில் பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் அதிச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.