கோவையில் இரண்டு யானைகள் கடும் மோதல் : தந்தத்தால் குத்தி 40 வயது ஆண் யானை உயிரிழப்பு…

கோவை வனச்சரகம் துடியலூர் பிரிவு, ஆனைகட்டி தெற்கு அடர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டு கொண்டு இருப்பதாக, அங்கு ஆடு மேய்த்து கொண்டு இருந்த பொன்னுசாமி என்பவர் வனத்துறையினர் தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து கோவை வனச்சரக வன ஊழியர்கள் மதியம் 2 மணியளவில் சென்று பார்த்தபோது, சண்டையில் ஏற்பட்ட காயங்களால் ஒரு ஆண் யானை காப்பு காட்டுக்குள்ளே எல்லையோரத்தில் தந்தத்தால் குத்திய காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு வன ஊழியர்கள் தகவல் அளித்தனர். இந்நிலையில், அங்கு வந்த வனச்சரகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சண்டையிட்ட மற்றொரு யானையின் உடல் நலம் அல்லது அது எங்கு உள்ளது..? என்பது குறித்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்ட ஆய்வில், உயிரிழந்த ஆண் யானைக்கு 40 வயது இருக்கும் என்றும்  (வெள்ளிக்கிழமை) பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.