இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை அறையில் அடைத்து சரமாரியாக தாக்கிக் கொல்ல முயற்சி – 5 மாணவர்கள் கைது.!!

கோவை : சேலம் மாவட்டம் சொக்கம்பட்டி பக்கம் உள்ள வெள்ளியம்பட்டியைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சவுந்தர்ராஜன் ( வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவருடன் தங்கி உள்ள மாணவர்களுக்கும் சவுந்தர்ராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் அறையில் வைத்து மோதல் ஏற்பட்டது. இதில் சவுந்தர்ராஜனை 5 பேர் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது . இதில் மாணவர் சவுந்திரராஜன் படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து இவரது தந்தை பூபாலன் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து அந்த அறையில் தங்கி இருந்த பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) திருப்பத்தூர் பாலாஜி (வயது 21) தர்மபுரி மாவட்டம் காரியமங்கலத்தைச் சேர்ந்த ரூபன் குமார் (வயது 20) தர்மபுரி மாவட்டம், அண்ணா நகரை சேர்ந்த அபிஷேக் ( வயது21) சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி ஸ்ரீ விஷ்ணு (வயது 21)ஆகியோரை நேற்று கைது செய்தார் . இவர்கள் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார்கள். இவர்கள் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..