குரங்கு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்..!!

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது. இதையடுத்து இன்று முதல் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 7 மாதங்களுக்கு பிறகு நீர்வீழ்ச்சி திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் காலையில் இருந்தே கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பூர் பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டமாக அருவிக்கு வந்தனர். அவர்கள் அருவியில் குடும்பத்துடன் ஆனந்தமாக உற்சாக குளியல் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுற்றுலா பயணிகள் வருகையால் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.