இன்று புனித வெள்ளி… இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் – தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு.!!

புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான நாளாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அவர் உயிர் நீத்த நிகழ்வினை நினைவு கூறுவதற்காக கொண்டாடப்படும் நாளாகும்.

புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது கருப்பு வெள்ளி என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நாள், மனித குலத்தின் பாவங்களை போக்குவதற்காக இயேசு கிறிஸ்து தனது உயிரை தியாகம் செய்த நாளாகும்.

புனித வெள்ளி என்பது துக்கம், தவம் மற்றும் உண்ணாவிரதம் கடைபிடிக்கும் ஒரு துயர நாளாகும். இயேசு கிறிஸ்துவின் கடைசி இரவு உணவு நாளே பெரிய வியாழனாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று துவங்கி, ஈஸ்டர் வரை இந்த துக்க காலம் கடைபிடிக்கப்படும். ஈஸ்டர் ஞாயிறு அன்று மாலை பிரார்த்தனையுடன் இந்த துக்க காலம் நிறைவடையும். ஈஸ்டர் என்பது, இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்த காலம் என்பதால் அந்த நாள் கொண்டாட்டத்திற்குரிய நாளாக கருதப்படுகிறது.

கத்தோலிக்க மற்றும் கிழக்கு ஆர்த்தடாக்ஸ் உட்பட கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் புனித வெள்ளியை நோன்பு மற்றும் தேவாலய சேவை அனுசரிக்கும் நாளாக கருதுகிறார்கள். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, பலியாகிய போது பூமியை இருள் சூழ்ந்ததாக பைபிள் கூறுகிறது. இதனால் புனித வெள்ளி அன்று மாலை 3 மணி முதலான 3 மணி நேரம் வேதனையின் சேவை என்ற பெயரில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவது மனிதகுலத்தின் பாவங்களை மன்னிப்பதற்காக செய்யப்படும் இறுதி தியாகமாக கருதப்படுகிறது. அவருடைய மரணம், விசுவாசிகளுக்கு நித்திய ஜீவனைப் பெற வழிகாட்டுவதாக நம்பப்படுகிறது. இது கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையே இரட்சிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையை திறக்கிறது. மனிதன், கடவுள் இடையேயான பந்தத்தை ஏற்படுத்தும் நாள் என்பதால் இது புனிதமான நாளாக குறிப்பிடப்படுகிறது. அதனாலேயே இந்த வெள்ளி, புனித வெள்ளி என குறிப்பிடப்படுகிறது.