வீட்டு வேலை எனச் சொல்லி வெளிநாட்டிற்கு அழைத்துச் கொடுமைப்படுத்துறாங்க – மஸ்கட்டில் இருந்து தப்பிய பெண் கண்ணீர் பேட்டி..!

வீட்டு வேலைக்கு என்று சொல்லி வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அடிமைபோல் அடைத்து வைத்து கொடுமை செய்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் அங்கு மாட்டியுள்ளனர் எனவும் மஸ்கட்டில் இருந்து தாயகம் திரும்பிய பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த கூலி தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப வறுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு தெரிந்தவர்கள் மூலம் வெளிநாட்டில் (மஸ்கட்) வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை துன்புறுத்தி வேலை வாங்கியதாகவும், உண்பதற்கும், உறங்குவதற்கும் கூட நேரம் தராமல் கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் தாயகம் திரும்ப வேண்டும் என்று கூறியதற்கு அங்கிருந்த ஏஜெண்ட் 3 லட்சம் தந்தால் தான் திருப்பி அனுப்ப முடியும் என்று மிரட்டியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவரை ஓமனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரிடம் இருந்த செல்போனை பறித்து வைத்துக் கொண்டு தூங்கவிடாமல் கொடுமைப்படுத்தி வேலை வாங்கியுள்ளனர். இந்த நிலையில் மதுரையில் உள்ள எம்எல்ஏ. ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளரான சசிகலா என்பவரை தொடர்பு கொண்ட நாகலட்சுமி அவரிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து எம்எல்ஏவின் வழிகாட்டுதலின்படி நாகலட்சுமி மீட்கபட்டு இரு தினங்களுக்கு முன்பாக இந்தியா அழைத்து வரப்பட்டுளார்.

இதைத் தொடர்ந்து தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு மாட்டியுள்ளதாகவும், உதவி கிடைக்காததால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், பலர் உணவு உடையின்றி தெருவில் திரிவதாகவும் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை வேண்டும் என்றும் நாகலட்சுமி கோரிக்கை வைத்துள்ளார்.