தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 19% குறைவு

மிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் காச நோய் பாதிப்பு 19 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாள்பட்ட பெருந்தொற்றுகளில் ஒன்று காசநோய். பாக்டீரியாவால் பரவக்கூடிய இந்த தொற்றுக்கு தொடர் இருமல், சளி, காய்ச்சல், உடல் எடை குறைவது உள்ளிட்டவை பிரதான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. நாள்பட்ட நோயாளிகளிடம் இருந்து அதிகளவில் பரவ கூடியது என்ற நிலையில், 1962 ஆம் ஆண்டு முதல் நாட்டில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தீவிர நடவடிக்கைகளால் ஒரு லட்சத்துக்கு 256 பேர் என காசநோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டுக்குள் 44 ஆக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 105 புள்ளி 9 பேர் என்ற எண்ணிக்கையில் காசநோயாளிகள் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 85 புள்ளி 8 ஆக குறைந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகளை அதிகரித்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்ததன் மூலமே இது சாத்தியமானதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, கடந்த 8 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சில மாவட்டங்களில் 207 சதவீதம் வரை பரிசோதனை எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதன் பலனாக, இந்த எட்டு ஆண்டுகளில் காசநோய் பாதிப்புகள் 19% குறைந்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 40% காசநோய் பாதிப்பு சரிவடைந்துள்ளது. இது போல், பரிசோதனைகள் அதிகரித்து பாதிப்பு குறைவது, நோய் பரவல் குறைந்திருப்பதற்கான அறிகுறி என மாநில காசநோய் அலுவலர் ஆஷா ப்ரெட்ரிக் தெரிவித்துள்ளார்.

ஆய்வகங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 835 முதல் 1600 ஆக உயர்த்தப்பட்டுள்ளன என்றும் உயர் பரிசோதனைகள் செய்யும் ஆய்வகங்கள் இதே காலக்கட்டத்தில் இரண்டிலிருந்து ஐந்தாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடமாடும் டிஜிட்டல் எக்ஸ் ரே வாகனங்கள் காசநோய் கண்டறிய முக்கிய பங்காற்றியதாகவும் கடந்த ஓராண்டில் மட்டும் இந்த வாகனங்கள் மூலம் ஒரு லட்சம் எக்ஸ் ரேக்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.