பொய் வழக்கு போடுகிறார்கள்… கோவை போலீசார் மீது திருநங்கைகள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்..!

கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் கிராந்தி குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- திருநங்கைகளாகிய எங்களை கோவை போலீசார் அடித்து துன்புறுத்தி வருகிறார்கள். எங்களுக்கு வீடும் இல்லை. யாரும் வேலை தருவதில்லை. இதனால் நாங்கள் சிக்னல்களில் நின்று அந்த வழியாக செல்லும் வாகனங்களில் பணம் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 திருநங்கைகள் மீது காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்காகும். இதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே எங்கள் மீது பொய் வழக்கு போட்டு வரும் போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.