அதிமுக இனி உடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை… தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி இது – இபிஎஸ் பரபரப்பு பேச்சு.!!

அதிமுக இனி உடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுக எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள எட்டிக்குட்டைமேடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி கொடியை ஏற்றிவைத்தார். அப்போது, பேசிய அவர், தமிழ்நாட்டில் மக்கள் வாழ முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டதாக கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் கேட்டிருந்தால், காவிரியில் நீர் கிடைத்திருக்கும் என தெரிவித்தார்.

கருணாநிதி ஆட்சியில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆலடிஅருணா உள்ளிட்டோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாகவும், ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக மு.க.ஸ்டாலின் வைத்திருப்பதாகவும் விமர்சித்தார்.

6 ஆயிரம் மது பார்களில் 3ஆயிரத்து 500 பார்களை முறைகேடாக நடத்தி வருவாய் ஈட்டப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், அதிமுகவில் 1 கோடியே 92 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.