பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஜூலை 30-ம் தேதி விண்ணில் பாய்கிறது..!

சிங்கப்பூரின் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஜூலை 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிய ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதுதவிர, வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சாா் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஜூலை 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-சாா் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. இது ‘சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா்’ என்ற நவீன தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து காலநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும் திறனுடன் அந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆா்கேட் (24 கிலோ) உள்பட 6 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன. இவை அனைத்தும் தொழில்நுட்ப ஆய்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது..