போலீஸ் வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட சிறுமி தாய் கண்முன் உயிரிழந்த சோகம் – காவலருக்கு அடி உதை..

கோவை:  தஞ்சாவூரை சேர்ந்தவர் ஜெயராஜ் .இவரது மனைவி ராஜேஸ்வரி( வயது 35) இவர்களது மகன் சஞ்சய் ( வயது 17 )மகள் திவ்யதர்ஷினி (வயது 7) மகன் மற்றும் மகளுடன் கடந்த 5ஆண்டுகளாக திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் குடியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். மகள் திவ்யதர்ஷினி அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று மாலை ராஜேஸ்வரி தனது மகள் திவ்யதர்ஷினியுடன் ஸ்கூட்டரில் விஜயாபுரத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர்கள் திருப்பூர் காங்கேயம் சாலை நல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் ராஜேஸ்வரி ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ராஜேஸ்வரியும் அவரது மகளும் தூக்கி வீசப்பட்டனர் .அப்போது அவர்கள் மீது போலீஸ் வாகனத்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மாணவி திவ்யதர்ஷினி அதே இடத்தில் இறந்தார். ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது..இதை பார்த்த அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய ஊர் காவல் படை காவலர் வீரச்சின்னன் ( வயது 35) என்பவரை அடித்து உதைத்ததனர்.. போலீசார் அவரை மீட்டுச் சென்றனர். பின்னர் ஊர்காவல் படை காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ரோடு மறியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் நந்தினி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.இது தொடர்பாக ஊர் காவல் படை காவலர் வீரச்சின்னான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கியதாக பொதுமக்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் வாகனம் மோதி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..