திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திடீரென உடைந்து விழுந்த கோபுர பிரம்மதேவன் சிலை.!!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் நான்கு ராஜகோபுரங்கள் மற்றும் ஐந்து சிறிய கோபுரங்கள் உள்ளது.

அந்த வகையில் அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அம்மணி அம்மாள் கோபுரத்தின் வலது பகுதியில் பிரம்மதேவன் சிலை அமைந்துள்ளது.

இந்த சிலையின் மார்பு பகுதி கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் உடைந்து இன்று காலை கீழே விழுந்துள்ளது. இந்தச் சம்பவம், பக்தர்கள் மட்டுமின்றி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல், கடந்த 2016ம் ஆண்டு, அண்ணாமலையார் திருக்கோயிலின் ராஜகோபுரத்தின் அடித்தள விமானத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வல்லுனர் குழுக்களை கொண்டு அவற்றை சரி செய்தனர்.

இதேபோல் அம்மணி அம்மாள் கோபுரத்தில் உள்ள பாவை சிலையில் விரிசல் ஏற்பட்டதையடுத்து அதுவும் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..