நாடாளுமன்ற தேர்தல்: பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் இருப்போம் – டிடிவி தினகரன் தகவல்..!

பாஜககூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறியதற்கு, வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி.
தினகரன் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அறிவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சித்து பேசும்போது அமைதியாக இருந்தவர்கள் இப்போது டெல்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். அதுதான் கூட்டணி விரிசலுக்கு காரணமாக உள்ளதா? அல்லது அதையும் தாண்டி வேறு காரணம் உள்ளதா என தெரியவில்லை. ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி தான் உண்மையான அதிமுக, தற்போது உள்ள கட்சி களவாடப்பட்ட அதிமுக என்று தெரிவித்தார்.கூட்டணி முறிவுக்குப் பிறகு, பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ” யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் இருப்போம், அதில்லாது போனால், தனித்து போட்டியிடும் சூழல் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சசிகலா-பன்னீர்செல்வம் இடையேயான விரிசல் காரணமாகத் தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், வாய்ப்பு வழங்கிய சசிகலாவிற்கு நன்றியுடன் இருக்கவில்லை. நான்காண்டு காலம் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தயவில் தான் எடப்பாடி ஆட்சி நடத்தி வந்தார். தற்போது, அவர்களுக்கும் நேர்மையுடன் இருக்க வில்லை என்று தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் மட்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மூட்டையிலிருந்து நெல்லிக்காய் போல சிதறும் என்று கூறிய அவர், 2026ல் அமமுக கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார்.