நதிநீர் இணைப்பு மட்டுமே காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு -தஞ்சையில் தே.மு.தி.க பிரேமலதா விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டம்.!!

நதிநீர் இணைப்பு மட்டுமே காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுத்துவரும் கர்நாடக அரசையும், இதனை கண்டுக் கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சை பனகல் கட்டடம் முன்பு தே.மு.தி.க சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைப்பெற்று வரும் உண்னாவிரத போராட்டத்தில் விவசாயிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கருகிய பயிரை கண்டு மாரடைப்பால் உயிர் இழந்த நாகை விவசாயி ராஜ்குமார் புகைப்படம் உண்ணாவிரத பந்தலில் வைக்கப்பட்டு, இருந்தது. அவரது புகைப்படத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
கர்நாடக அரசு உரிய தண்ணீர் வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது. கண்முன்னே வாடிய பயிரை கண்டு விவசாயி ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்தினரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். தே.மு.தி‌.க‌ நிர்வாகிகள் நேரில் சென்று ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நாட்டிற்கே உணவு அளிப்பவர்கள் விவசாயிகள்.
ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீருக்காக கர்நாடகத்தை நாடி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 1968-ம் ஆண்டிலிருந்தே காவிரி நதிநீர் பிரச்சனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. ஆண்ட கட்சிகள், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது தான் உண்மை. இனிமேலாவது காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்.  இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நதிநீர் இணைப்பே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். தே.மு.தி.க என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.  தற்போது வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தண்ணீர் கடைமடை வரை நிச்சயமாக செல்லாது.
டெல்டா மாவட்டங்களில் சரியாக  தூர்வாரவில்லை. மணல் கொள்ளை,  கனிம வளகொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது.
பருவ காலங்களில் பெய்யும் மழை நீர் எங்கு செல்கிறது. அதனை முறையாக சேமிக்கவில்லை. தடுப்பணைகளை அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும்.‌ செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காவிரி பிரச்சனை வருகிறது. மழைக்காலம் வந்தால் மறந்துவிடுகிறோம். உண்ணாவிரத நோக்கம் குறித்து கவர்னரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய நிவாரணம் என்பது தற்காலிக தீர்வுதான். அவர்களுக்கு தேவை நிரந்தர தீர்வு. எப்பொழுதுதான் அந்த நிரந்தர தீர்வை நாம் அளிக்கப் போகிறோம். எத்தனை வருடங்கள் போராட போகிறோம் .இதற்கு நிரந்தர தீர்வு வர வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.
அ.தி.மு.க. பா.ஜ.க கூட்டணி குறித்து தற்போது கருத்து கூற முடியாது. அரசியலில் நிந்தர நண்பரும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தஞ்சை மாநகர அவை தலைவர் அடைக்கலம் வரவேற்பு உரையாற்றினார் .
தஞ்சை மாநகர் மாவட்ட கழக செயலாளர் டாக்டர் .ராமநாதன், குடந்தை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கோ. சங்கர் ,தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி .எஸ். கே .பழனிவேல், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் சுகுமார் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக உயர்மட்ட குழு உறுப்பினர் முகமது அலி ,கழக விவசாய அணி துணை செயலாளர் சாமிநாதன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் பூபேஷ் குமார், கழக தேர்தல் பிரிவுசெயலாளர் மாதவன்,. உள்ளிட்ட நான்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தஞ்சை கிழக்கு பகுதி செயலாளர் டி. செந்தில்காந்த் நன்றி உரை கூறினார்.