பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக் கோள்-நாசா சொன்ன அதிர்ச்சி தகவல்..!

பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் பற்றிய அதிர்ச்சி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய செயற்கை கோள்களின் ஆயுள் முடிந்து விட்டது.

அதன் எடை 2450 கிலோ. ஜனவரி 15ஆம் தேதி அதாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் பூமியில் விழும் என்று நாசா தெரிவித்துள்ளது. சுற்று பாதையில் இருந்து விடப்பட்டு புவி ஈர்ப்பு பகுதிக்குள் நுழைந்தவுடன் செயற்கைக்கோள் தீப்பற்றி எரிந்து விடும் என்றும் எரியாத சில பகுதிகள் மட்டும் பூமியில் விழும் என்று நாசா அறிவித்துள்ளது.

1984 ஆம் ஆண்டு சேலஞ்சர் விண்கலம் மூலம் ஏவப்பட்ட Earth Radiation Budget என்ற செயற்கைக்கோள் பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பூமியின் கதிர்வீச்சு சமநிலையை ஆய்வு செய்வதே இந்த செயற்கைக்கோளின் பணியாகும். 21 ஆண்டுகள் அதாவது 2005 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்ட இந்த செயற்கைக்கோள் அதன் பின் செயல் திறன் குறைந்து கடந்த 17 ஆண்டுகளாக இயங்கி வந்தது. தற்போது பூமியில் எந்த இடத்திலும் விழும் என்று சரியாக தெரியாவிட்டாலும் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, மேற்கு, தெற்கு, வட அமெரிக்காவில் விழலாம் என்று யூகித்துள்ளார்கள் நாசா விஞ்ஞானிகள்.