தமிழகத்தில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு.!!

கோடைக்காலம் நெருங்கிய நிலையில், கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது.

வெப்பம் அதிகரிப்பதால் தண்ணீரின்றி செடிகள், மரங்கள் என அனைத்தும் வாடுகின்றன. இதனால் விளைச்சலும் குறைகின்றன. விளைச்சல் குறையும் போது காய்கறி, உணவுத் தேவைகளின் தட்டுப்பாடு அதிகமாகிறது. ஆக வரத்து குறைவால் விலை அதிகரிக்கிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆனால் அனைத்து இடங்ளிலும் வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்து தற்போது குறைந்துள்ளது. மேலும் கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வைத்திருக்கும் காய்கறிகளும் வெயிலால் வாடி வீணாகி விடுகின்றன.

இதனால் காய்கறிகளின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ. 30 வரை காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய விலை நிலவரப்படி, ஒரு கிலோ பீன்ஸ் ரூ.160-க்கும், எலுமிச்சை ரூ. 140-க்கும், பட்டாணி ரூ.100-க்கும், இஞ்சி ரூ.140-க்கும், பூண்டு ரூ.150-க்கும் விலை உயர்ந்து விற்பனையானது. அதேபோல, சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கும், ஊட்டி கேரட் ரூ.50- க்கும், சேனைக்கிழங்கு ரூ. 68-க்கும், வெள்ளரிக்காய் ரூ.30-க்கும், பச்சை மிளகாய் ரூ.45-க்கும், குடைமிளகாய் ரூ.50-க்கும், வண்ண குடமிளகாய் ரூ. 90-க்கும் விலை உயர்ந்து விற்பனையானது.