பஸ்சின் அடியில் படுத்து தூங்கிய புது மாப்பிள்ளை பரிதாப பலி..

கோவை காளப்பட்டி காட்டூர் வீதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் கருப்புசாமி (வயது 25) தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் காலை பேரூரில் இருந்து பீளமேடு பாலிடெக்னிக் வரை செல்லும் தனியார் பஸ் ஓட்டிச் சென்றார். அன்று இரவு 9:30 மணி அளவில் அவர் பேரூர் சிறுவாணி ரோடு பச்சாபாளையம் அருகே தனியார் பெட்ரோல் பங்கில் பஸ்சை நிறுத்தினார். அங்கு மேலும் 2 தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இரவு பஸ்சை நிறுத்தியதும் தனியார் பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அங்கே படுத்து தூங்கி உள்ளனர் . இதில் டிரைவர் கருப்பசாமி தான் ஓட்டி வந்த தனியார் பஸ்சின் கீழே பாய் விரித்து படுத்து தூங்கினார். நேற்று காலையில் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வந்தனர். அப்போது கருப்புசாமியை எழுப்பிவிட்டனர். ஆனால் அவர் அசந்து தூங்கிவிட்டார். இதற்கிடையே மற்ற தனியார் பஸ் டிரைவர் கண்டக்டர்கள் குளித்து தயாராகி பணிக்கு புறப்பட்டனர். கருப்பசாமி ஓட்டும் தனியார் பஸ்சை நேற்று ஓட்ட வேண்டிய மற்றொரு டிரைவர் சூர்யா அங்கு வந்தார். டிரைவர் சூர்யா பஸ்சின் கீழே கருப்பசாமி படுத்திருப்பதை கவனிக்காமல் பஸ்சை முன்னோக்கி இயக்கினார். அப்போது பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய கருப்புசாமி கண் இமைக்கும் நேரத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தார் ..இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..இறந்த கருப்புசாமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் ( ஜூன்) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.