இருகூர் பேரூராட்சியில் சமுதாய நலக் கூடங்களில் செயல் அலுவலர் திடீர் ஆய்வு.

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்களை ஏலத்தில் எடுத்து சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏலத்தில் எடுத்தவர்கள் உள் வாடகைக்கு விட்டுள்ளதாகவும், மேலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தங்க வைத்திருப்பதாகவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் திடீரென்று இருகூர் பேரூராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது அங்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளார்களா என்றும், உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஏலத்தில் எடுத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இது போன்ற செயல்கள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் ஏலத்தை ரத்து செய்வதுடன், துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் செயல் அலுவலர் கலையரசி தெரிவித்துள்ளார்.