பொள்ளாச்சியில் ஆற்றில் விழுந்த காலணியை எடுக்க சென்ற வாலிபர் மாயம்- 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்..!

கோவை: பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 34). கூலி
தொழிலாளி. இவர் தனது மாமா சாதிக் என்பவருடன் நேற்று அம்பராம்பாளையம்
பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது ஷாஜகானின் காலணி ஆற்றில் விழுந்தது. உடனே அவர் ஆற்றில்
குதித்து காலணியை எடுக்க சென்றார். அப்போது அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு
சென்றதாக தெரிகிறது. அதன் பின்னர் அவர் ஆற்றில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாதிக் வீட்டுக்கு சென்று ஷாஜகானின் தாயாரிடம்
நடந்தவற்றை கூறினார். உடனே அவர் ஆனைமலை போலீஸ் நிலையம் சென்று புகார்
தெரிவித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீயணைப்பு வீரர்கள்
உதவியுடன் காலணி எடுக்க ஆற்றில் குதித்த ஷாஜகானை தேடி வந்தனர். இரவு
நேரம் ஆனதால் நேற்று தேடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இன்று காலை மீண்டும் 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஷாஜகானை ஆற்றில்
தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.