கவனக் குறைவால் நடந்த விபத்து… சட்டென வாகனத்தை திருப்பிய நபர்- இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயம்..!

கோவையில் கவனக் குறைவாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்காமல் இருசக்கர வாகனத்தை திருப்பிய நபரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்களும் மோதி காயமடைந்தனர்.

கோவை ஆவாராம்பாளைம் பகுதியில், ஒரு நபர் சாலை ஓரம் நிறுத்தி வைத்து இருந்த அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு திருப்ப முற்பட்டு உள்ளார். அப்போது அவர் பக்கவாட்டு கண்ணாடியை பார்க்காமலும் பின்னால் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா ? என பார்க்காமலும் கவன குறைவுடன் வாகனத்தை திருப்பி உள்ளார். அச்சமயம் அச்சாலையில் மற்றொரு இரு வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதினர். இதில் இரண்டு வாகனங்களில் இருந்தவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மூவரையும் எழுப்பி ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதில் மூன்று பேருக்கும் காயங்கள் ஏற்பட்டு உள்ளது. மேலும் மூன்று பேரும் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கியதும் குறிப்பிடத்தக்கது.

வாகனங்களை இயக்கும் போது தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என காவல் துறையினர் பலமுறை எச்சரித்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தலைக் கவசம் அணியாமல் வாகனத்தில் செல்கின்றனர். அதேபோல் வாகனத்தை இயக்கும் பொழுதும் கவனக் குறைவுடன் வாகனத்தை இயக்குவதால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.