உயிரையும் மடத்தையும் காப்பாற்றிய முதல்வருக்கு நன்றி – தருமபுரம் ஆதீனம்.!!

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவோம் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தலைமறைவான பா.ஜ.க மாவட்ட தலைவர் உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் சிலர், தருமபுரம் ஆதீன மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது இ.பி.கோ 323, 307,389, 506(2), 120 B உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைதான 4 பேரும், நான்கு பேரும் மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ‘உயிரையும், மடத்தையும் காத்த முதல்வருக்கு நன்றி’ என தருமபுரம் ஆதினம் கூறியுள்ளார்.

தொடர்ந்து, ‘எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் பா.ம.க.வில் இருந்து பிரிந்து வந்தவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தரக்குறைவாக விமர்சித்ததாக வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.