ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்-தேர்வர்கள் கவலை..!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 769
காலியிடங்களை நிரப்ப குரூப் ‘டி’ தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது.
இதில், முதல் கட்ட தேர்வு முடிந்துள்ள நிலையில், வட மத்திய ரயில்வே
(அலகாபாத்), வடமேற்கு ரயில்வே (ஜெய்ப்பூர்). தென்கிழக்கு மத்திய ரயில்வே
(பிலாஸ்பூர்) ஆகியவற்றுக்கான 2-வது கட்ட தேர்வு கடந்த 26-ந் தேதி முதல்
தொடங்கி நடந்து வருகிறது.

இதையடுத்து, தெற்கு ரயில்வே (சென்னை), வடக்கு ரயில்வே (டெல்லி),
வடகிழக்கு எல்லை ரயில்வே (கவுகாத்தி), கிழக்கு கடற்கரை ரயில்வே
(புவனேஸ்வர்) ஆகியவற்றுக்கு 3-வது கட்ட தேர்வு வரும் 8-ந் தேதி முதல்
19-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த குரூப் டி தேர்வு கணினி அடிப்படையில் காலை, மதியம், மாலை என 3 பிரிவுகளில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். இருப்பினும், மையங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆந்திர மாநிலம் கடப்பாவில்
தேர்வு மையம் போடப்பட்டுள்ளது. இவர், சேலம், சென்னை பகுதியில் தேர்வு
எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், தேர்வு மையம் ஆந்திர மாநிலத்தில்
போடப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவரை போல் ராணிப்பேட்டை
மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவருக்கு ஆந்திரா மாநிலம் கர்நூல் பகுதியில்
தேர்வு மையம் போடப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தை சேர்ந்த பலருக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில்தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில்வே குரூப் டி தேர்வுக்காக நீண்ட நாட்கள் படித்து வருவதாகவும், எனவே எங்கு தேர்வு மையம் அமைத்தாலும் எப்படியும் எழுதியாக வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாகவும் தேர்வர்கள் கவலை தெரிவித்தனர்.

தமிழகத்தில் இருந்து ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு
தொடர்ந்து வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருவதால்,
ரயில்வே பணியில் சேருவதில் தமிழக மாணவர்களுக்கு தொடர்ந்து சிக்கல்
ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழகழக அரசு தடுக்க
வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.